சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் விளக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதல்முறையாக ஆர்சிபி வீழ்த்தியது. இதை சென்னை ரசிகர்களால் நம்ப முடியவில்லை.
டோனி கடைசி வரை போராடினார். ஆனால் வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை. அஸ்வினுக்கும் பின்னர் 9வது இடத்தில் அவர் களம் இறங்கினார். அவர் ஒரு வேளை முன்கூட்டியே களம் இறங்கியிருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கலாம்.
இருப்பினும் ஒட்டுமொத்த டீமாக ஆர்சிபி விளையாடி முதல் முறையாக சென்னை மண்ணில் மகத்தான வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி தோல்வி அடைந்தது என்பது குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது :
இந்த பிட்சில் 170 ரன் தான் வெற்றி பெறக் கூடிய இலக்கு என்று நான் உணர்கிறேன். ஏனெனில் இந்த பிட்சில் பேட் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. மேலும் எங்கள் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது.
நீங்கள் 170 ரன்களைத் துரத்தும்போது, உங்களுக்கு இன்னும் நிதானமாக ஆட கொஞ்சம் நேரம் கிடைக்கும். ஆனால் நீங்கள் 20 ரன்கள் கூடுதலாகத் துரத்தும்போது பவர்பிளேயில் வித்தியாசமாக பேட் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த பிட்சில் அது முடியவில்லை. நான் கடைசி வரை நிற்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் முடியவில்லை.
எங்கள் தோல்விக்கு காரணம் மோசமான பீல்டிங்தான். உலக தரம் வாய்ந்த 3 ஸ்பின்னர்களை அணியில் வைத்துக்கொண்டு இத்தனை ரன் கொடுத்ததற்கு மோசமான பீல்டிங்தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.