Udhayanithi

ஜிம்னாசியாட் விளையாட்டில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு ரூ.15 லட்சம்  உதவித்தொகை

சென்னை

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செர்பியா நாட்டில்  நடைபெற உள்ள சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் ஜிம்னாசியாட் 2025 போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு செலவீன தொகையாக மொத்தம்  ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

செர்பியா நாட்டில்  வரும் 4.4.2025 முதல் 14.4.2025 வரை சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜிம்னாசியாட் 2025 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் டேக்வாண்டா, நடனம் ஆகிய பிரிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  நேற்று (2.4.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், செர்பியா நாட்டில்  நடைபெற உள்ள சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் ஜிம்னாசியாட் 2025 போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விமான பயண கட்டணம், தங்குவதற்கான செலவுகள், போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணம், விசா கட்டணம், காப்பீட்டு கட்டணம், உணவுக்கான செலவுகள் என ஒவ்வொரு வீரருக்கும் தலா  ரூ. 2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்கினார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார். 

போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதி உதவி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள்  www.tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top