Nz

கடைசி டி 20-ல் பாகிஸ்தானை சுருட்டி வீசியது நியூஸி.

வெலிங்டன்:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 60 பந்துகளை மீதும் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெலிங்டன் நகரில் நேற்று (மார்ச் 26) நடைபெற்ற கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். ஷதப் கான் 28, முகமது ஹாரிஸ் 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. நியூஸிலாந்து அணி தரப்பில் ஜேம்ஷ் நீஷாம் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

129 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 2 விகெட்களை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான டிம் ஷெய்பர்ட் 38 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபின் ஆலன் 27, மார்க் சாப்மன் 3 ரன்களில் வெளியேறினர். 60 பந்துகளை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

3-வது ஆட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் அணி தோல்வியை தவிர்த்திருந்தது. ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் நீஷாம் தேர்வானார். 249 ரன்கள் குவித்த டிம் ஷெய்பர்ட் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். டி 20 கிரிக்கெட் தொடரை அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் ஆட்டம் வரும் 29-ம் தேதி நேப்பியர் நகரில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top