யு-19 உலகக் கோப்பையில் 6-வது முறையாக இந்தியா சாம்பியன்

ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 218.75 ஸ்டிரைக் ரேட்டுடன் 80 பந்துகளில், 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் யு-19 டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் சூர்யவன்ஷி.

இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் உன்முகுந்த் சந்த் 111* ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும் யு-19 உலகக் கோப்பை வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு தொடரில் ராஜ் பாவா 162* ரன்கள் விளாசியிருந்தார்.

U 19 4 ALT

மேலும் ஒரு சிறப்பம்சமாக யு-19 உலகக் கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக சிக்ஸர்கள் விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸின் சாதனையையும் முறியடித்தார் சூர்யவன்ஷி. கடந்த 2022-ம் ஆண்டு தொடரில் பிரெவிஸ் 22 சிக்ஸர்கள் அடித்திருந்தார். தற்போதைய தொடரில் சூர்யவன்ஷி 30 சிக்ஸர்களுடன் பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த சாதனைகளுடன் யு-19 உலகக் கோப்பையில் அதிவிரைவாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் சூர்யவன்ஷி. அவர், 55 பந்துகளில் சதம் விளாசினார். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் வில் மலாஜ்சுக் 51 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக உள்ளது.

420 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து அணியில் கடும் அச்சுறுத்தலாக திகழ்ந்த காலேப் பால்கனர் 67 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசி கடைசி வீரராக ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் அம்ப்ரிஷ் 3 விக்கெட்களை விழ்த்தினார். தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 6-வது முறையாகும். இதற்கு முன்னர் 2000, 2008, 2012, 2018, 2022-ம் ஆண்டுகளிலும் இந்திய அணி வாகை சூடியிருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top