பிரெஞ்சு ஓபன் பைனலில் அல்கராஸ் – சின்னர் மோதல்

பாரிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 6-ம் நிலை வீரரும் 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார்.

3 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-4 7-5 7-6(3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் தொடரின் ஓபன் எராவில் (1968-ம் ஆண்டுக்கு பிறகு) இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2-வது இத்தாலி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜன்னிக் சின்னர். இதற்கு முன்னர்  1976-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் இத்தாலியின் அட்ரியானோ பனாட்டா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜன்னிக் சின்னர், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இருவரும் 11 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர்.

இதில் அல்கராஸ் 7 முறை வெற்றி கண்டுள்ளார். ஜன்னிக் சின்னர் 4 ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தியிருந்தார். அல்கராஸ் 5-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார். அதேவேளையில் ஜன்னிக் சின்னர் 4-வது பட்டத்துக்கு குறிவைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top