பிரித்து மேய்ந்த பிரப்சிம்ரன்
லக்னோ: ஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. மிட்செல் மார்ஷ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்ற, அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது லக்னோ அணி. மார்க்ரம் 28 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, லக்னோ 35 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், நிகோலஸ் பூரன் – ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்து ஸ்கோர் கணிசமாக உயர உதவினர். பூரன் 44 ரன் (30 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 19 ரன், பதோனி 41 ரன் (33 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அப்துல் சமத் 27 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆர்யா வசம் பிடிபட, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. ஷர்துல் தாகூர் 3, ஆவேஷ் கான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 3, பெர்குசன், மேக்ஸ்வெல், யான்சென், யஜ்வேந்திர சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஆர்யா 8 ரன் எடுத்து திக்வேஷ் ரதி சுழலில் வெளியேற, பிரப்சிம்ரன் – கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 84 ரன் சேர்த்தது.

பிரப்சிம்ரன் 69 ரன் (34 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி திக்வேஷ் பந்துவீச்சில் பதோனி + பிஷ்னோய் கூட்டணியால்! எல்லைக் கோட்டில் பிடிக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு வந்த நெஹல் வதேராவும் பவுண்டரி, சிக்சராகப் பறக்கவிட்டு லக்னோவை நோகடித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் 16.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஷ்ரேயாஸ் 52 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), வதேரா 43 ரன்னுடன் (25 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. பிரப்சிம்ரன் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.