15 மாதங்களுக்கு பிறகு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீது விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை விளையாட்டு அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது.
இந்திய மல்யுத்த சங்க தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த குற்றச்சாட்டை பிரிஜ்பூஷன் மறுத்தாலும் மத்திய அரசு திடீரென இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து கடந்த 2023 டிசம்பர் 24ம் தேதி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சஞ்சய் சிங் தலைமையில் புதிய நிர்வாக குழு அமைக்கப்பட்டது. 2026ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் உள்ள அம்மானில் மார்ச் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் கோட்டையான கோண்டாவின் நந்தினி நகரில் 15 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதைஎல்லாம் கருத்தில் கொண்டு மல்யுத்த சங்கம் மீதான தடையை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. 2026 ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்களின் பதக்க வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று கருதி, இடைநீக்கத்தை முடித்துக்கொண்டது.