பிரதான டிராவில் 13 இந்திய போட்டியாளர்கள் இடம் பெற்று சாதனை . உலகத் தரவரிசையில் 4, 5-வது இடங்களில் உள்ள டொமோகாசு ஹரிமோடோ, ஹினா ஹயாடா களமிறங்குகின்றனர்.
சென்னை ; சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை WTT ஸ்டார் கன்டென்டர் தொடர் நடைபெற உள்ளது. சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்படுவது இது முதன்முறையாகும். இந்நிலையில் இந்தத் தொடாருக்கு இந்தியாவில் இருந்து 13 போட்டியாளர்கள் நேரடி தகுதி பெற்றுள்ளனர். தரவரிசையின் அடிப்படையில் இவர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஏற்கெனவே இரு முறை இந்தியாவில் நடைபெற்ற WTT ஸ்டார் கன்டென்டர் தொடரில் பங்கேற்ற இந்திய போட்டியாளர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகமாகும். மார்ச் 25-ம் தேதி தொடங்க உள்ள ‘WTT ஸ்டார் கன்டென்டர் 2025 சென்னை’ தொடரில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டொமோகாசு ஹரிமோடோ, 5-வது இடத்தில் உள்ள ஹினா ஹயாட்டா தலைமையில் வலுவான வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளும் களமிறங்குகின்றனர்.
‘WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை’ தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரதான டிராவில் 48 பேர் இடம் பெறுவார்கள். அதே நேரத்தில் இரட்டையர் பிரதான டிராவில் (ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு) 16 ஜோடிகள் இடம் பெறும். இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.39 கோடியாகும். சாம்பியன்களுக்கு 600 புள்ளிகளும் வழங்கப்படும்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான டிராவில் இந்திய நட்சத்திரங்களான மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அய்ஹிகா முகர்ஜி, யஷஸ்வினி கோர்படே இடம் பெறுவார்கள். அதேவேளையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான டிராவில் ஜாம்பவான் சரத் கமல் தலைமையில் மானவ் தாக்கர், சத்தியன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் ஸ்டார் கன்டென்டர் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4 இந்தியர்கள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும். இவர்கள் அனைவருமே ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய சார்பில் பதக்கம் வென்றவர்களாவர்.
சமீபத்தில் ‘WTT ஸ்டார் கன்டென்டர் தோஹா 2025’-ல் சாம்பியனாக முடிசூட்டப்பட்ட ஜப்பானின் ஹரிமோட்டோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரேசிலின் ஹ்யூகோ கால்டெரானோ (உலகத்தரவரிசை 6) உள்ளிட்டோர் கடும் சவால்களை அளிக்கக்கூடும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹினா ஹயாடா, 6-வது இடத்தில் உள்ள மிவா ஹரிமோட்டோ ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்கும் டாப் 10 வீரராங்கனைகளில் 4 பேரில் இருவர் ஆவார்கள். இது பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி வலுவானதாக இருப்பதை உறுதி செய்கிறது.
இரட்டையர் பிரிவில் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஆகியோர் ஆண்கள் இரட்டையர் ஜோடியாக சென்னைக்குள் நுழைவதைக் காண இந்திய ரசிகர்கள் உற்சாகமாக இருப்பார்கள். தற்போதைய நிலவரப்படி இந்த ஜோடியே போட்டித் தரவரிசையில் டாப்பில் உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அய்ஹிகா, சுதிர்தா முகர்ஜி ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்குகின்றனர். அதே நேரத்தில் யஷஸ்வினி கோர்படே, தியா சித்தலேவுடன் ஜோடி சேருகிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனுஷ் ஷா சித்தலே ஜோடி களமிறங்குகிறது. மற்றொரு ஜோடியாக ஹர்மீத் தேசாய், யஷஸ்வினி கோர்படே விளையாட உள்ளது இந்தியாவின் சவாலுக்கு வலு சேர்க்கும்.
வைல்டு கார்டு மற்றும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஏற்கெனவே வலுவாக இருக்கும் இந்திய அணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றையர் பிரதான டிராவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசையின் அடிப்படையில் 25 வீரர், வீராங்கனைகள் நேரடியாக இடம் பெறுவார்கள். இவர்களுடன் போட்டியை நடத்தும் நாட்டில் இருந்து 4 வைல்டு கார்டுகள், WTT பரிந்து செய்யும் 2 பேர், WTT இளைஞர் பிரிவு பரிந்துரை செய்யும் ஒருவர், டாப்-20ல் உள்ள 8 வீரர்கள் மற்றும் எட்டு தகுதி வீரர்கள் இடம்பெறுவார்கள், இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த களத்தை உறுதி செய்யும். இரட்டையர் பிரதான டிராவில் (ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு) எட்டு நேரடி உள்ளீடுகள், இரண்டு ஆன்சைட் உருவாக்கப்பட்ட ஜோடிகள், இரண்டு ஹோஸ்ட் வைல்டு கார்டுகள் மற்றும் தகுதிச் சுற்றின் வாயிலாக 4 பேர் இடம் பெறுவார்கள்.