ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பகேற்ற 4 சீசன்களில் 3-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ஆர்பிசி அணி கடந்த6 வருடங்களில் 5-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. பஞ்சாப் அணி 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் லீக் சுற்றை முதல் 4 இடங்களுக்குள் நிறைவு செய்ய உள்ளது.

3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட போதிலும் லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படக்கூடும். ஏனெனில் முதல் இரு இடங்களுக்குள் லீக் சுற்றை நிறைவு செய்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு அந்த அணிகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இதன்படி அந்த அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும். இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.