ஹைதராபாத்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 6) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி நடப்பு சீசனை சிறப்பாக தொடங்கியது. ஆனால் அதன் பிறகு லக்னோ, டெல்லி, கொல்கத்தா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.
கடந்த வருடம் 2-வது இடம் பிடித்த ஹைதராபாத் அணி இம்முறை அதிரடி ஆட்டம், தீவிர அதிரடி ஆட்டம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை வகிப்பதில் தடுமாறி வருகிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 286 ரன்களை குவித்து மிரட்டியது. ஆனால் அடுத்த 3 ஆட்டங்களில் முறையே 190, 163 மற்றும் 120 ரன்களே சேர்த்தது. புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு முயற்சி செய்யக்கூடும்.
இன்றைய ஆட்டம் சொந்த மைதானத்தில் நடைபெறுவது ஹைதராபாத் அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும். ஏனெனில் போட்டி நடைபெறும் ராஜீவ் காந்தி மைதானத்தில் ரன்வேட்டை நிகழ்த்துவது எளிதானதாக இருக்கும். கடந்த ஆட்டங்களில் டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. அதிலும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் இலக்கை துரத்தி 120 ரன்களுக்கு சுருண்டிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் அந்த அணி பேட்டிங்கை பலப்படுத்துவதிலும், பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவதிலும் தீவிரம் காட்டக்கூடும். ஏனெனில் பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, முகமது ஷகி ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் தாரை வார்த்து வருகின்றனர். இதில் பாட் கம்மின்ஸ் 12 ரன்களுக்கு மேல் வழங்கி வருகிறார். இளம் சுழற்பந்து வீச்சாளரான ஜீஷான் அன்சாரியும் 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பவராக உள்ளார். பிரதான பந்து வீச்சாளர்களில் ஒருவர் கூட எந்த ஆட்டத்திலும் முழுமையாக 4 ஓவர்களை வீசவில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணி மெது மெதுவாக உத்தேவகம் பெற்று வருகிறது. சீசனை தோல்வியுடன் தொடங்கிய அந்த அணி அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை வீழ்த்தியது. அதிரடி பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் பார்முக்கு திரும்பியிருப்பது குஜராத் அணியின் பலத்தை அதிகரிக்கக்கூடும். தொடக்க பேட்டிங்கில் சாய் சுதர்சன் வலுவாக செயல்பட்டு வருகிறார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும்.
கேப்டன் ஷுப்மன் கில்லும் தாக்குதல் ஆட்டத்துக்கு திரும்பும் பட்சத்தில் அணி கூடுதல் வலுப்பெறும். நடுவரிசையில் ஷெர்பேன் ரூதர்போர்டு, ராகுல் டெவாட்டியா அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். பந்து வீச்சு துறையில் காகிசோ ரபாடா அவரசமாக தாயகம் சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக ஜெரால்டு கோட்ஸி அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய முகமது சிராஜிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். அவருக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் செயல்படக்கூடும். அதேவேளையில் ரஷித் கான் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.