Kane williamson

ஷார்ட் பிட்ச் பந்துகளை ஸ்ரேயஸ் நொறுக்குகிறார்

கேன் வில்லியம்சன் பாராட்டு

அகமதாபாத்:

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ததியது பஞ்சாப் கிங்ஸ். இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.

இந்நிலையில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் கூறியதாவது:

ஸ்ரேயஸ் ஐயருக்கு ஷார்ட் பந்துகள் பிரச்னையாக இருந்தன. ஆனால், தற்போது அவர், அதை புத்திசாலித்தனமாக சமாளித்துள்ளார். கிரீஸில் உள்ளே இருந்து முன்னங்காலில் எடையைக் குறைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை அடித்து நொறுக்குகிறார். ஸ்ரேயஸ் ஐயரின் திறமையில் எது வியக்க வைக்கிறது என்றால் அவரால் மீண்டும் தனது எடையை முன்னோக்கி வரவைக்க முடிகிறது. இது பந்துவீச்சாளர்களுக்கு ஷார்ட் பந்துகளையும் ஃபுல்லராக வீசவும் கட்டாயப்படுத்துகிறது.

ஸ்ரேயஸ் ஐயர் தற்போது மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஷாட்டுகளை அடிக்கிறார். அது அவரை மிகவும் வலிமைமிக்க பேட்டராக மாற்றியுள்ளது. குஜராத் அணிக்கு எதிராக அவர், விளாசிய 97 ரன்கள் அவருடைய உயர்தர ஆட்டத்தை குறிக்கிறது. முதல் பந்திலிருந்தே அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து எங்குசென்று விழ வேண்டுமோ அங்கு சரியாக அடித்தார்.

அவுட் சைடு ஆஃப் ஸ்டம்பில் பந்தினை வீசினால் அதையும் கவர்சைடில் சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரஷித் கான் ஓவரையும் பதம்பார்த்தார். இந்தப் போட்டியில் அது மிகவும் சவாலான விஷயம்.

இவ்வாறு கேன் வில்லியம்சன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top