பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிக்கு ஓகே

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு கர்நாடக அமைச்சரவை நேற்று (12-ம் தேதி) ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள சின்னசாமி திடலில் ஜூன் 4-ம் தேதி ஆர்சிபி சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைக் கூறி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால், பெங்களூருவில் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டி வேறு மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மைதானத்தில் ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கூட்டநெரிசல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி குன்ஹா குழு, சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பை மேம்படுத்த 17 பரிந்துரைகளை வழங்கியது. அதேபோல், பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மகேஷ்வர் ராவ் தலைமையிலான அரசின் குழுவின் சில பரிந்துரைகள் வழங்கியது.

இந்த பரிந்துரைகளை மார்ச் 15-ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஐபிஎல் 2026 போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவது குறித்து நேற்று தீவிர ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு, மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த சீசனில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருப்பதால், இந்தாண்டின் தொடக்க போட்டியும், இறுதிப் போட்டியும் பெங்களூருவில் நடத்தப்படவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top