Shreyas Stoynis scaled

2வது முறையாக பைனலில் பஞ்சாப் கிங்ஸ்

மும்பைக்கு எதிராக கேப்டன் ஷ்ரேயாஸ் விஸ்வரூபம்

அகமதாபாத்: ஐபிஎல் 18வது சீசன் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யரின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Shreyas Stoynis

மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டி, கனமழை காரணமாக நீண்ட தாமதத்துக்குப் பின்னர் தொடங்கியது. எனினும், ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாமல் தலா 20 ஓவர்கள் கொண்ட முழுமையான போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர்.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச… மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. ரோகித் 8 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தாலும்… பேர்ஸ்டோ 38 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 44 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சூரியகுமார் 44 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹர்திக் 15, நமன் திர் 37 ரன் (18 பந்து, 7 பவுண்டரி) விளாசி ரன் குவிப்புக்கு உதவினர்.

ராஜ் பாவா 8, மிட்செல் சாண்ட்னர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஒமர்ஸாய் 2, ஜேமிசன், ஸ்டாய்னிஸ், வைஷாக், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. எதிரணிக்கு 200+ ரன் இலக்கு நிர்ணயித்த 18 போட்டியில் ஒரு முறை கூட தோற்றதில்லை என்ற வரலாற்று சாதனை கைவசம் இருப்பதால் மும்பை அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் பந்துவீச்சை தொடங்கியது.

பஞ்சாப் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் 6, ஆர்யா 20 ரன்னில்  வெளியேற, ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக 38 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி துரத்தலுக்கு வேகம் சேர்த்தார். அவர் ஹர்திக் வேகத்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் பிடிபட்ட நிலையில், கேப்டன் ஷ்ரேயாஸ் – நெஹல் வதேரா இணைந்து மும்பை பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்து மும்பை தரப்புக்கு தண்ணி காட்டியது.ஷ்ரேயாஸ் 27 பந்தில் அரை சதம் அடித்தார். வதேரா 48 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷஷாங்க் சிங் 2 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை தரப்பு மீண்டும் உற்சாகம் அடைந்தது.

ஆனாலும், பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் கொஞ்சமும் பதற்றம் அடையாமல் சிக்சர்களாகப் பறக்கவிட்டு அணியை இலக்கை நோக்கி நகர்த்தினார். கடைசி 2 ஓவரில் 23 ரன் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீச அஷ்வனி குமாரை அழைத்தார் மும்பை கேப்டன் ஹர்திக்.

Shreyas 2

அந்த ஓவரில் விஸ்வரூபம் எடுத்த ஷ்ரேயாஸ் 4 இமாலய சிக்சர்கள் உள்பட 26 ரன் சேர்த்து 2வது முறையாக பஞ்சாப் அணியை ஐபிஎல் பைனலுக்கு முன்னேற வைத்தார்.  இந்த நம்ப முடியாத அதிரடியை கொஞ்சமும் எதிர்பார்க்காத மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.ஒரு கேப்டனாக கடைசி வரை போராடி 87 ரன்னுடன் (41 பந்து, 5 பவுண்டரி, 8 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மும்பை பந்துவீச்சில் அஷ்வனி குமார் 2, போல்ட், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் சீசன் 18ல் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பரபரப்பான பைனலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன (அகமதாபாத், ஜூன் 3).

ஆர்சிபி அணி 4வது முறையாகவும் (2009, 2011, 2016, 2025), பஞ்சாப் 2வது முறையாகவும் (2014, 2025) இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top