RCB Celebration 2

பைனலுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ்

சுயாஷ், ஹேசல்வுட், சால்ட் அசத்தல் * குவாலிபயர் 1ல் பஞ்சாப் பரிதாபம்

முல்லன்பூர்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான குவாலிபயர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

RCB Celebration 2

ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்த பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றில் மல்லுக்கட்டுகின்றன.

மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடந்த முதலாவது குவாலிபயர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் ரஜத் பத்திதார் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சித்த பஞாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் தேவையில்லாமல் தூக்கி அடித்து விக்கெட் தானம் செய்தனர். ஹேசல்வுட், சுயாஷ் ஷர்மா துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்த பஞ்சாப் கிங்ஸ் 14.1 ஓவரிலேயே 101 ரன்னுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 26 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங், அஸ்மதுல்லா உமர்சாய் தலா 18 ரன் எடுக்க… மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.

ஆர்சிபி பந்துவீச்சில் சுயாஷ் ஷர்மா 3 ஓவரில் 17 ரன்னுக்கு 3 விக்கெட், ஜோஷ் ஹேசல்வுட் 3.1 ஓவரில் 21 ரன்னுக்கு 3 விக்கெட்,யஷ் தயாஸ் 2, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 102 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ்.

ஃபில் சால்ட், விராத் கோஹ்லி இணைந்து துரத்தலை தொடங்கினர். கோஹ்லி 12 ரன், மயாங்க் அகர்வால் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். எனினும், சால்ட் – கேப்டன் ரஜத் பத்திதார் இணை உறுதியுடன் அடித்து விளையாட… பெங்களூரு அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.

Salt

சால்ட் 56 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ரஜத் 15 ரன்னுடன் (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஜேமிசன், முஷீர் கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆர்சிபி பவுலர் சுயாஷ் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளிடையே நடைபெற உள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மோதுவதற்தாகக் காத்திருக்கிறது.     

  • ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் எதிரணியை 15 ஓவர்களுக்குள்ளாக சுருட்டிய முதல் அணி என்ற வரலாற்று சாதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கிடைத்துள்ளது.
  • பிளே ஆப் சுற்றில் அதிக பந்துகளை மீதம் வைத்து பெற்ற இமாலய வெற்றி என்ற சாதனையும் (60 பந்து) ஆர்சிபி வசமாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top