sanju samson

நான் ஆட்டமிழந்ததும்.. எல்லாம் போச்சு.. சஞ்சு சாம்சன் விரக்தி !

அகமதாபாத்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 9) அகமதாபாத்தில் நடைபற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 53 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார்.

ஜாஸ் பட்லர் 36, ஷாருக்கான் 36, ராகுல் டெவாட்டியா 24, ரஷித் கான் 12 ரன்கள் சேர்த்தனர். 218 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் சேர்த்தனர்.

சஞ்சு சாம்சன்

போட்டி முடிவடைந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்போது,“ பந்துவீச்சில் சுமார் 15-20 ரன்கள் அதிகம் வழங்கினோம். பேட்டிங்கின் போது நாங்கள் உத்வேகத்தை எடுத்துச் செல்ல விரும்பிய போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம். நானும் ஹெட்மயரும் பேட்டிங் செய்தபோது இலக்கு சேஸிங் செய்யக்கூடியதாகவே இருந்தது. ஆனால் எனது விக்கெட் ஆட்டத்தை மாற்றியது.

ஜோஃப்ரா பந்துவீசிய விதமும், ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய விதமும் அற்புதமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்ட ஓவர்களில் நாங்கள் பந்து வீசிய விதம் சிறப்பானதாக இல்லை. இதுதொடர்பாக அணியின் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து சிறப்பாக மீண்டு வர வேண்டும்.

ஆட்டங்களை இழக்கும்போதுதான், முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டுமோ? என்று நினைக்கிறோம், இந்த நிலைமைகளை நாங்கள் எதிர்பார்த்தோம். இது நல்ல ஆடுகளம். நாங்கள் நிலைமைகளை மதிக்க விரும்புகிறோம், சேஸிங் செய்யும் போது ஆட்டங்களை வெல்லக்கூடிய அணியாக இருக்க விரும்புகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top