Rahane

15 புள்ளிகளை எடுத்தால் பிளே ஆஃப்…. கனவில் ரஹானே !

‘கொல்கத்தா

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் அஜிங்க்ய ரஹானே 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்தார். மணிஷ் பாண்டே 36, ஆந்த்ர ரஸ்ஸல் 38 ரன்கள் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

180 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

தற்போதைய தோல்வியால் கொல்த்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் கொல்கத்தா வெற்றி பெற்றாலும் அந்த அணி 15 புள்ளிகளுடனே லீக் சுற்றை நிறைவு செய்ய முடியும். இது நிகழ்ந்தாலும் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமே.

இந்நிலையில் சிஎஸ்கே ஆட்டத்துக்கு பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறும்போது, “15 புள்ளிகளை நாங்கள் எடுக்கும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று நினைக்கிறேன். நாங்கள் இன்னும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.

எங்களுக்கு இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ளன. ஹைதராபாத், பெங்களூரு அணிகளை எதிர்கொள்ள உள்ளோம். இந்த இரண்டு ஆட்டங்களில் எப்படி வெற்றி பெறுவது என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். கடந்த 3 ஆட்டங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம் எங்கள் திட்டத்திற்கு ஏற்ப நடக்கவில்லை, ஆனால் ஒரு அணியாக, நாங்கள் மீண்டு வருவோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top