தர்மசாலா: பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதிய 58வது லீக் ஆட்டம், மின்விளக்கு கோபுரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெறும் 10.1 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி 10 ஓவரில் 122 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.
ஆர்யா 70 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் திவாரி வசம் பிடிபட்டார். பஞ்சாப் கிங்ஸ் 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்திருந்த நிலையில் மின்விளக்கு கோபுரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிரப்சிம்ரன் 50 ரன்னுடன் (28 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டி தொடர்ந்து நடக்க வாய்ப்பில்லை என்பதால் இப்போட்டியை முடிவு இல்லாத போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த அணிகளுக்கான போட்டி எண்ணிக்கையிலோ அல்லது புள்ளிகளிலோ மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. போர் சூழல் காரணமாக சில தர்மசாலா, சண்டிகர் உள்பட பல விமான நிலையங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு நடைபெற உள்ள போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லையில் பதற்றம் பற்றியெரியும் நிலையில், தற்ப்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
- ஆர்யா நடப்பு சீசனில் தனது 3வது அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.
- பிரப்சிம்ரனுக்கு இது 5வது அரை சதம் என்பதுடன், அவர் தொடர்ச்சியாக விளாசும் 4வது அரை சதமாகும்.