டேவிட் அதிரடி வீண்
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டி, கனமழை காரணமாக நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர் தொடங்கியது. இதனால், தலா 14 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச… அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய ஆர்சிபி அணியால் 14 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
கேப்டன் ரஜத் பத்திதார் 23 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), டிம் டேவிட் ஆட்டமிழக்காமல் 50 ரன் (26 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, கோஹ்லி உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
பஞ்சாப் பந்துவீச்சில் யான்சென், சாஹல், பிரார் தலா 2 விக்கெட், அர்ஷ்தீப், பார்ட்லெட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 14 ஓவரில் 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

ஆர்யா 16, பிரப்சிம்ரன் 13, கேப்டன் ஷ்ரேயாஸ் 7, ஜோஷ் இங்லிஸ் 14, ஷஷாங்க் சிங் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். நெஹல் வதேரா 33 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூரு பந்துவீச்சில் ஹேசல்வுட் 3, புவனேஷ்வர் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆர்சிபி அணி தோல்வியைத் தழுவினாலும், அதிரடியாக அரை சதம் விளாசிய டிம் டேவிட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேற, ஆர்சிபி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.