பாகிஸ்தானில் நடக்கும் சூப்பர் லீக் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர், அங்கிருந்து விலகி ஐபிஎல் தொடரில் விளையாட வந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி பிசிபி நடவடிக்கை எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கார்பின் போஷ். இவர் பாகிஸ்தானில் ஏப்.11 முதல் மே 18 வரை நடக்கும் பாக். சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் சல்மி அணிக்கு டயமண்ட் பிரிவில் தேர்வு செய்யப்பட்டார்.
ஜனவரி 13ம் தேதி லாகூரில் நடந்த ஏலத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக திடீரென விலகினார்.
அவருக்கு பதில் புதிய வீரரை தேடிய மும்பை இந்தியன்ஸ் அணி, பாக். சூப்பர் லீக்கில் இடம் பெற்று இருந்த கார்பின் போஷ்சுடன் ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து கார்பின் போஷ், பாக்கில் நடக்கும் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகினார்.

ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் ஒரே நேரத்தில் நடப்பதால் பாக். வாரியம் கார்பின் போஷ் செயல்களால் அதிருப்தி அடைந்தது. உரிய விளக்கம் கேட்டு தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் தவித்து போய் உள்ளார் கார்பின் போஷ்.
தென்னாப்பிரிக்கா அணிக்காக கார்பின் போஷ் ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டி, 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் காயமடைந்த அன்ரிச் நார்ட்ஜேவுக்குப் பதிலாக சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார்.
அவர் இன்னும் ஐபிஎல்லில் அறிமுகமாகவில்லை. போஷ் முன்பு ராஜஸ்தான் ராயல்ஸின் ஒரு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்தார். 2022ல் ஆஸ்திரேலியாவின் நாதன் கூல்டர்-நைலுக்கு மாற்றாக உரிமையாளரால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
===