மும்பை இந்தியன்ஸுடன் இன்று பலப்பரீட்சை
லக்னோ
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் மும்பை இந்தியன்ஸ் (MI) – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 3 ஆட்டங்களில் விளையாடி 2 தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

மும்பை அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த போதிலும் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்களை வீழ்த்தி முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில் 23 வயதான பஞ்சாப்பை சேர்ந்த அஸ்வனி குமாரின் பந்து வீச்சு நம்பிக்கையை அளித்துள்ளது. பேட்டிங்கில் ரியான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டுமே கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 3 ஆட்டங்களையும் சேர்த்து அவர், 25 ரன்களை கூட எட்டவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பேட்டிங் பலமாக உள்ளது. நிகோலஸ் பூரன் 3 ஆட்டங்களில் 189 ரன்களை விளாசி நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மற்றொரு ஓப்பனரான மிட்செல் மார்ஷும் இரு அரை சதங்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார். அதேவேளையில் ரிஷப் பந்த்தின் மோசமான பார்மில் உள்ளார். ரோஹித் சர்மாவை போன்றே இவரும் 25 ரன்களை கூட தொடவில்லை.
பந்து வீச்சை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய் ஆகியோரை மட்டுமே பந்து வீச்சில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனினும் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் காயத்தில் இருந்து குணமடைந்து லக்னோ அணியுடன் இணைந்துள்ளார். அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் பட்சத்தில் லக்னோ அணியின் பந்து வீச்சுக்கு பலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.