RCB

ஆர்சிபியிடம் போராடி தோற்றது மும்பை

மும்பை: ஐபிஎல் 18வது சீசன் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் 12 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆர்சிபி அணியை பேட் செய்ய அழைத்தார். சால்ட் – கோஹ்லி இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் இன்னிங்சை தொடங்கினர்.

RCB

சால்ட் 4 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து கோஹ்லி – தேவ்தத் படிக்கல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 91 ரன் சேர்த்தது. படிக்கல் 37 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி புதூர் பந்துவீச்சில் ஜாக்ஸ் வசம் பிடிபட்டார்.

கோஹ்லி – கேப்டன் ரஜத் பத்திதார் இணை 3வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தது. 29 பந்தில் அரை சதம் அடித்த கோஹ்லி 67 ரன் (42 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்திக் பந்துவீச்சில் நமன் திர் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த லயம் லிவிங்ஸ்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

கடைசி கட்டத்தில் பத்திதார் – ஜிதேஷ் ஷர்மா ஜோடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, ஆர்சிபி ஸ்கோர் 200ஐ தாண்டியது. பத்திதார் 64 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் விக்கெட் கீப்பர் ரிக்கெல்டன் வசம் பிடிபட்டார்.

ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. ஜிதேஷ் ஷர்மா 40 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), டிம் டேவிட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் போல்ட், ஹர்திக் தலா 2 விக்கெட், விக்னேஷ் புதூர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பை இந்தியன்சின் தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா, ரியான் ரிக்கெல்டன் தலா 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். வில் ஜாக்ஸ் 22, சூரியகுமார் யாதவ் 28 ரன்னில் வெளியேற, மும்பை 12 ஓவரில் 99 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

Tilak Hardik

இந்த நிலையில், திலக் வர்மா – கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்து அதிரடியில் இறங்க, மும்பை ஸ்கோர் வேகம் எடுத்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் விழி பிதுங்கினர். திலக் வர்மா 26 பந்தில் அரை சதம் விளாசினார்.

திலக் – ஹர்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 34 பந்தில் 89 ரன் சேர்த்து ஆர்சிபி அணிக்கு திகிலூட்டியது. எனினும், திலக் 56 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் 42 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது மும்பை இந்தியன்சுக்கு பின்னடைவை கொடுத்தது.

க்ருணால் பாண்டியா கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில்… சாண்ட்னர் (8), தீபக் சாஹர் (0), நமன் திர் (11) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.

போல்ட் (1), பும்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. கேப்டன் ரஜத் பத்திதார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவரது தலைமையில் ஆர்சிபி சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளில் முதல் முறையாகவும், வாங்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளில் முதல் முறையாக மும்பை இந்தியன்சையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஈடன் கார்டனில் நடக்கும் 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன (ஏப்.8).  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top