இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் மனைவியும் நடிகையுமான ஆதியா ஷெட்டி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஆதியா ஷெட்டியை, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் படத்தை கே.எல்.ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள கேஎல் ராகுல் முதற்கட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று (மார்ச் 24) ராகுல் – ஆதியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதை கே.எல்.ராகுல் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்துள்ள நிலையில், கே.எல். ராகுல் விரைவில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.