ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 26) ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்திருந்தது.
முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசினார்.
ரியான் ரிக்கெல்டன் 27, ரோஹித் சர்மா 24, வில் ஜேக்ஸ் 17, ஹர்திக் பாண்டியா 26, நமன் திர் 20 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
185 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 9 பந்துகளை மீதம் வைத்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில், 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஷ் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப்பின் தகுதி சுற்று 1-ல் விளையாட தகுதி பெற்றது. அதேவேளையில் தோல்வியை சந்தித்த மும்பை அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “ஆடுகளம் செயல்பட்ட விதத்துக்கு பேட்டிங்கில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
நாங்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம், ஆனால் எங்களால் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியவில்லை.
தொடக்கத்திலோ அல்லது ஆட்டத்தின் நடுவிலோ கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். இதற்கான வழியை கண்டுபிடிப்போம்.
ஐபிஎல் இப்படிதான் இருக்கும். மும்பை ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது. இது எப்போதும் கடினமாகவே இருந்து வருகிறது.
நீங்கள் ஆக்சிலரேட்டரில் இருந்து காலை எடுத்தால், மற்ற அணிகள் வெற்றி பெற ஆர்வமாக இருக்கும். இந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு நாக் அவுட் சுற்றில் முன்னேற்றம் காண்போம்.
பந்துவீச்சில் தவறு செய்யும் போதெல்லாம் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக ஒரு பந்துவீச்சு குழுவாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எங்கள் தரத்துக்க தகுந்தபடியிலான செயல் திறனை நாங்கள் வெளிப்படுத்தவில்லை” என்றார்.