ஐசிசி தொடர்களில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி சுமார் ரூ.2,200 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் என சில மதிப்பீடுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் இணைத்து போட்டி அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்தப் போட்டி வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இல்லாதது, ஒட்டுமொத்த போட்டியுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் அணி உறுதியாக இருந்தால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோடிக்கணக்கான வருவாயை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும். தற்போது அந்த வாரியத்தின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.350 கோடியாக உள்ளது. பாகிஸ்தானின் விடாப்பிடியான இந்த முடிவு ஐசிசி-யின் நிதிநிலைக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தும்.
மேலும் ஐசிசி-யுடன் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தை வாயிலாக நடத்த முயற்சிக்கும் இந்திய ஊடக உரிமையாளரான ஜியோஸ்டாருக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் போது 10 வினாடி விளம்பரத்துக்கு ரூ.40 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும் போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி ரூபாய் வரை விளம்பர வருவாய் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.

