கோயம்புத்தூர் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று கோயம்புத்தூரில் உள்ள சிடிசிஏ – ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாகஇடது கை பேட்ஸ்மேன் துஷார் ரஹேஜா 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார்.
பிரதோஷ் ரஞ்ஜன் பால் 38, முகமது அலி 16 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபிஷேக் தன்வார், விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாபா அபராஜித் 48 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், மோகித் ஹரிகரண் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், விஜய் சங்கர் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளடன் 41 ரன்களும் விளாசினர்.
போட்டி முடிவடைந்ததும் திருப்பூர் அணியின் சசிதேவ் கூறும்போது, “நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்ததாக உணர்ந்தோம். சில முக்கியமான தருணங்களை தவறவிட்டோம், மேலும் அபராஜித் மற்றும் விஜய் சங்கர் மிக அழகாக பேட் செய்தனர்” என்றார்.
இன்று (சனிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியுடன் மோதுகிறது.