கேப்டன் கில் அதிரடி
கொல்கத்தா: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 39 ரன் வித்தியாசத்தில் மண்டியிட்டது.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ரகானே பந்துவீச முடிவு செய்தார். சாய் சுதர்சன், கேப்டன் கில் இணைந்து குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்சை தொடங்கினர்.
வழக்கம்போல அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.1 ஓவரில் 114 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. கில் 34 பந்தில் அரை சதம் விளாச, சுதர்சன் 33 பந்தில் 50 ரன்னை எட்டினார். சுதர்சன் 52 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் பந்துவீச்சில் குர்பாஸ் வசம் பிடிபட்டார்.
அடுத்து கில் – ஜோஸ் பட்லர் இணைந்து கொல்கத்தா பந்துவீச்சை பதம் பார்க்க… குஜராத் ஸ்கோர் எகிறியது. கில் 90 ரன் (55 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அரோரா பவுலிங்கில் ரிங்குவிடம் கேட்ச் கொடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ராகுல் திவாதியா டக் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் பட்லர் – ஷாருக் கான் இணை அதிரடி காட்ட… குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. பட்லர் 41 ரன் (23 பந்து, 8 பவுண்டரி), ஷாருக் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணயின் தொடக்க வீரர்கள் குர்பாஸ் 1, சுனில் நரைன் 17 ரன்னில் வெளியேறினர். வெங்கடேஷ் 14, கேப்டன் ரகானே 50 ரன்னில் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினர்.
ரஸ்ஸல் 21, ரிங்கு 17, ரமன்தீப் 1, மொயீன் அலி (0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன் மட்டுமே எடுத்து 39 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரகுவன்ஷி 27 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்ஷித் ராணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குஜராத் பந்துவீச்சில் ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட், சிராஜ், இஷாந்த், வாஷிங்டன், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கேப்டன் கில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
சூப்பர் ஃபார்மில் இருக்கும் ஜிடி வீரர்கள் சாய் சுதர்சன் 8 இன்னிங்சில் 417 ரன் குவித்து ஆரஞ்சு தோப்பியையும், பிரசித் கிருஷ்ணா 8 இன்னிங்சில் 16 விக்கெட் சாய்த்து ஊதா தொப்பியையும் அணிந்துள்ளனர்.