சகவீரர்களும் தலா ரூ.6 லட்சம் கட்டணும்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 9) அகமதாபாத்தில் நடைபற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 53 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார்.
ஜாஸ் பட்லர் 36, ஷாருக்கான் 36, ராகுல் டெவாட்டியா 24, ரஷித் கான் 12 ரன்கள் சேர்த்தனர். 218 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் சேர்த்தனர்.
சஞ்சு சாம்சனுக்கு…
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இது 2-வது முறையாகும். இதனால் கேப்டனுடன் விளையாடும் லெவன் மற்றும் இம்பாக் பிளேயர் விதியில் களமிறங்கிய வீரருக்கும் தலா 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் ஆகியவற்றில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ? அதை அபராதமாக செலுத்த வேண்டும் என ஐபிஎல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.