ஜெய்ப்பூர்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக சீசனான 2008-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் இந்த சீசனில் முதல் 3 ஆட்டங்களுக்கு ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கக்கூடும். ஜாஸ் பட்லர் இல்லாதது பின்னடைவை கொடுக்கக்கூடும். எனினும் ரியான் பராக் அதை நிர்வத்தி செய்யக்கூடும். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஷுபம் துபே ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜோப்ரா ஆர்ச்சரின் வருகை பலம் சேர்க்கக்கூடும். அனுபவம் வாய்ந்த சந்தீப் சர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். ஸ்பின்னர்களில் மஹீஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா பலம் சேர்க்கக்கூடும். இதில் ஹசரங்கா பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடியவர். இவர்களுடன் குமார் கார்த்திகேயா சிங்கும் வலுசேர்க்கக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க அதிக ஆல்ரவுண்டர்கள் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஹசரங்கா மட்டுமே ஆல்ரவுண்டர் பட்டியலில் உள்ளார். ரியான் பராக், நித்திஷ் ராணா ஆகியோர் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களாக செயல்படும் திறன் கொண்டவர்கள். ஆனால், நெருக்கடியான ஆட்டங்களில் இவர்களால் சமாளிக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியே.