இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய 6 நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன், ஜாண்டி ரோட்ஸ், கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் முதலிய பல்வேறும் சாம்பியன் வீரர்கள் விளையாடிவருகின்றனர். பரபரப்பாக நடந்துவரும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டியை எட்டியுள்ளன.
இதில் முதல் அரையிறுதிப்போட்டியானது சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் 7 பவுண்டரிகளை விளாசி 30 பந்தில் 42 ரன்கள் அடித்து அசத்தினார்.
அதற்குபிறகு மிடில் ஆர்டர் வீரராக களத்திற்கு வந்த யுவராஜ் சிங் 7 சிக்சர்களை பறக்கவிட்டு 30 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் மெக்கெய்ன் ஓவரில் 3 சிக்சர்களை விளாசி துவம்சம் செய்தார். உடன் பின்னி 36, யூசுப் பதான் 23 மற்றும் இர்ஃபான் பதான் 19 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 220 ரன்களை குவித்தது இந்தியா.
221 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில், தொடர் முழுவதும் 3 சதங்கள் விளாசி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷேன் வாட்சன் 5 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஷேன் மார்ஸ் மற்றும் பென் டங் இருவரும் தலா 21 ரன்கள் அடித்து வெளியேற ஆஸ்திரேலியா தடுமாறியது.
மிடில் ஆர்டரில் சிறப்பாக பந்துவீசிய ஷபாஷ் நதீம் 4 ஓவரில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா.
இதனால் 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணி, பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.