சாம்பியன் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் மெச்சத்தகுந்த விதத்தில் இருந்தது. 2024ல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவரது அணியின் இருப்பிடமே கேள்விக்குறியான நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 243 ரன் குவித்து இந்திய வீரர்களில் முதலிடத்தையும், அதிக ரன் பட்டியலில்263 ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,’ வாழ்க்கையில் மோசமான கால கட்டத்தில் நான் இருக்கும்போதெல்லாம் எனக்கு மெசேஜ் வருபவர்கள் வெகு சிலரே. அவர்கள் பிரவின் ஆம்ரே சார், அபிஷேக் நாயர், சாகர் மற்றும் இன்னும் சிலர் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள், நான் அவர்களை எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன். எல்லாம் நன்றாக இருக்கும் போது அவர்கள் சாதாரணமாக இருப்பார்கள், ஆனால் நான் தாழ்வான நிலையில் இருந்தால் இன்னும்நெருக்கமாக இருப்பார்கள்.
சாம்பியன் டிராபி போட்டி முடிந்த பிறகு என்னை கேப்டன் ரோகித் ஷர்மா அமைதியான ஹீரோ என்று வர்ணித்தார். இந்த இடத்தை பிடித்தது எளிதானது அல்ல. எந்த சூழலிலும், எந்த இடத்தில் களம் இறக்கினாலும், நான் எனது வேலையை நன்றாக செய்து விட்டு திரும்புவேன். எதிர்காலம் அல்லது கடந்த காலத்தைப் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை’ என்றார்.