மாஜி வீரர் ஷதாப் ஜகாதி பளிச்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இன்று வரை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏக்கம் உலகம் முழுவதும் உள்ள ஐபிஎல் ரசிகர்களுக்கு உண்டு.
விராட் கோலிக்காகவாவது ஒரு முறையாவது ஆர்சிபி ஐபிஎல் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசை இல்லாத ரசிகர்கள், ஏன் கிரிக்கெட் வீரர்கள் கூட இல்லை எனலாம். சர்வதேச கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா போல், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி ஒரு துரதிருஷ்டமான அணி.

அந்த அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பது குறித்து 2 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவரும், அதன் பிறகு 2014ல் ஆர்சிபி அணியில் இருந்தவருமான சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் ஜகாதி அளித்த பேட்டி:
இது ஒரு குழு விளையாட்டு. நீங்கள் கோப்பைகளை வெல்ல விரும்பினால், அணி ஒரு குழு போல விளையாட வேண்டும். 2-3 வீரர்கள் கோப்பையை வெல்ல உங்களுக்கு உதவ முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலுவான இந்திய வீரர்கள் மற்றும் சில ஒழுக்கமான வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
அப்படிப்பட்ட கலவையைப் பெறுவது முக்கியம். நான் ஆர்சிபி அணியில் இருந்தபோது, அவர்கள் 2-3 வீரர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆர்சிபி வீரர்கள் நல்லவர்கள், ஆனால் தோழமை இல்லாதவர்கள்.
அணி நிர்வாகம், டிரஸ்ஸிங் ரூம் சூழலைப் பொறுத்த வரையில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. வீரர்கள் மிகவும் நன்றாக பழகினர். ஆனால் தோழமை இல்லை.

வீரர்கள் சரியான பிணைப்பில் இல்லை. அதுதான் ஆர்சிபி கோப்பையை இதுவரை வெல்ல முடியாததற்கு காரணம். நான் சொன்னது போல், அணி நிர்வாகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
சென்னையின் நிர்வாகம் உண்மையில் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் தங்கள் வீரர்களை நன்றாக கவனித்துக்கொண்டனர். இவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய விஷயங்கள். இவை தான் எஸ்கே மற்றும் ஆர்சிபியில் நான் உணர்ந்த வேறுபாடுகள்.
இவ்வாறு தெரிவித்தார்.