Msd

சிஎஸ்கேவுக்க இந்த சீசன் சொல்லிமுடிந்தது… தோனி !

மும்பை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், ஷிவம் துபே 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன 50 ரன்களும் சேர்த்தனர்.

அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். தொடக்க வீரர்களான ஷெய்க் ரஷித் 19, ரச்சின் ரவீந்திரா 5, தோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் சாஹர், அஸ்வனி குமார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

MSD 4

177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 76 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். முன்னதாக தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 19 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

மும்பை அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ள மும்பை அணி. அதேவேளையில் சிஎஸ்கே 8 ஆட்டங்களில் விளையாடி 6வது தோல்வியை சந்தித்துள்ளது. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியான நிலை உருவாகி உள்ளது. தற்போதைய அணியின் பார்மை கருத்தில் கொண்டால் சிஎஸ்கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவிப்பது என்பது சாத்தியம் இல்லாதது என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் தோனி கூறும்போது, “கடந்த காலங்களில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியதால்தான் வெற்றிகரமாக இருந்தோம் என்பதை இப்போது உணர வேண்டும். இது போன்ற நேரத்தில் உணர்ச்சி வசப்படாமல் யதார்த்தமாக இருக்க வேண்டும். சில கேட்ச்களை பிடிப்பது வெற்றிக்கு உதவும். அதைத் தவிர்த்து நாங்கள் நிறைய ஓட்டைகளை அடைக்கப் பார்க்கிறோம். இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் நாங்கள் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

ஒரு சமயத்தில் ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு விளையாடுகிறோம். சில போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தால், அடுத்த ஆண்டுக்கான சரியான 11 பேர் கொண்ட அணி எது என்பதைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். அதேவேளையில் நிறைய வீரர்களை மாற்ற விரும்ப மாட்டோம். இங்கிருந்து நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சி செய்வது முக்கியம். ஒருவேளை இந்த வருடம் எங்களுக்கு பாதுகாப்பான லெவன் அமையாவிட்டால் அடுத்த வருடம் வலுவாக கம்பேக் கொடுப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top