சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்பரல்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி கே.எல்.ராகுலின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார்.
184 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 54 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்களும், தோனி 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களும் சேர்த்தனர்.
போட்டி முடிவடைந்ததும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படல் கூறும்போது,“தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது பெரிய விஷயம். பெரியதோ சிறியதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இதுதான் திட்டம், அது இதுவரை வெற்றிகரமாக உள்ளது. விரலில் காயம் ஏற்பட்டதால் என்னை பாதுகாத்துக் கொள்ளவே பந்து வீச்சில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினேன். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறோம், ஆனால் கேட்ச்களை தவறவிடுகிறோம். இதனால் ஆட்டத்தின் போக்கு எந்த நேரத்திலும் மாறலாம்” என்றார்.