ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக்கத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் விராட் கோலி 31 ரன் எடுத்தார். இதன் மூலம் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஷிகர் தவான் 1057 ரன் குவித்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவர் 29 இன்னிங்ஸ் விளையாடி இந்த ரன்களை குவித்து இருந்தார். அவரை விராட் கோலி தற்போது முந்தி உள்ளார்.
விராட் கோலி , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 34 ஆட்டத்தில் 33 இன்னிங்ஸ் விளையாடி 1,084 ரன் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலியின் அதிகபட்சம் 90 ரன். இதில் 9 அரைசதம் ஆகும்.
ஷிகர் தவான் அதிகபட்சம் 101 ரன். அவர் 8 அரைசதம் விளாசி உள்ளார். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த வீரர்கள் விராட் கோலியும், ஷிகர் தவானும் மட்டுமே. 3வது இடத்தில் 35 ஆட்டத்தில் 896 ரன் எடுத்த ரோகித்தும், 4வது இடத்தில் 33 ஆட்டத்தில் 727 ரன் எடுத்த தினேஷ் கார்த்திக்கும், 5வது இடத்தில் 21 ஆட்டத்தில் 696 ரன் எடுத்த டேவிட் வார்னரும் உள்ளனர்.