WTT ஸ்டார் கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (25-ம் தேதி)
தகுதி சுற்று போட்டியுடன் தொடங்கியது வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரை ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
உலகின் சிறந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் 600 புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. ரூ.2.35 கோடி பரிசுத்தொகை கொண்ட WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 தொடரில் பாரிஸ் 2024 மற்றும் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேருடன் தமிழகத்தைச் சேர்ந்த 18 வீரர்,வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 25-ம் தேதி) காலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு “WTT ஸ்டார் கன்டென்டர் 2025” டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தினார். நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஸ்டூபா விளையாட்டு பகுப்பாய்வு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் மாலிக், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் இகான்ஷ் குப்தா, பத்மஸ்ரீ மற்றும் கேல் ரத்னா விருது பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரர் சரத் கமல் ஆகியோர் உடனிருந்தனர்.