கோவை
டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நடப்பு சாம்பியனான திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஷிவம் சிங் 30, கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 18, ஆர்.கே.ஜெயந்த் 18 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4, மதிவண்ணன் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
94 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். அமித் சாத்விக் 13, ராதாகிருஷ்ணன் 14 ரன்கள் சேர்த்தனர்.