சேலம்
டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூன் 15) பிற்பகலில் சேலம் எஸ்சிஎப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி சோழாஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் விளாசினார். சுஜாய் 37, முகிலேஷ் 23, ஜபார் ஜமால் 17 ரன்கள் எடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்களையும், டி. நடராஜன், சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துஷார் ரஹேஜா 36 பந்துகளில், 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசினார். பிரதோஷ் ரஞ்சன் பால் 42, முகமது அலி 25 ரன்கள் எடுத்தனர். திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி சார்பில் கே.ஈஸ்வரன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்கள் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்து 4 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேவேளையில் திருச்சி சோழாஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை பெற்றது. அந்த அணி இதுவரை விளையாடி உள்ள 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.