லண்டன்
இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு சிறப்புத் திறன் ஆலோசகராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 2-வது வாரத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை தி ஓவலில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் சிறப்புத் திறன் ஆலோசகராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். டிம் சவுதி 2024-ம் ஆண்டு டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இங்கிலாந்து அணி வரும் 22-ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக டிம் சவுதி, இங்கிலாந்து அணியுடன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 36 வயதான டிம் சவுதி 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 391 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அதேவேளையில் 161 ஒருநாள் போட்டிகளில் 221 விக்கெட்களையும், 126 சர்வதேச டி 20 போட்டிகளில் 164 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.