Gill

6 ஓவர்களால் வெற்றி போச்சு: ஷுப்மன் கில் புலம்பல்

அகமதாபாத்:

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச் 25) அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் 42 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷஷாங் சிங் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி மிரட்டினார்.

இறுதிக்கட்ட ஓவர்களில் அவர், மேற்கொண்ட தாக்குதல் ஆட்டமே போட்டியின் முடிவில் பெரிய வித்தியாசத்தை காட்டியது. முன்னதாக தொடக்க வீரரான பிரியன்ஸ் ஆர்யா 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்திருந்தார். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் 4 ஓவர்களை வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

shashan OK 1

இதையடுத்து 244 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான சாய் சுதர்சன் 41 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார். ஜாஸ் பட்லர் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் ஷெர்பேன் ரூதர்போர்டு 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 46 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ஷுப்ன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

ஷுப்மன்

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 75 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் கைவசம் 8 விக்கெட்கள் இருந்தது. இந்த சூழ்நிலையில் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய வைஷாக் விஜயகுமார் 15 மற்றும் 17வது ஓவர்களில் வைடு யார்க்கர்களை சாதுர்யமாக வீசி வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16வது ஓவரை மார்கோ யான்சனும் கச்சிதமாக வீச குஜராத் அணிக்கு நெருக்கடி அதிகமாக கடைசி 18 பந்துகளில், 57 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க பவர்பிளேவின் முதல் 3 ஓவர்களில் குஜராத் அணி 17 ரன்களே சேர்த்தது. ஆக மொத்தம் இந்த 6 ஓவர்களிலும் குஜராத் அணி சேர்த்தது வெறும் 35 ரன்கள்தான்.

அதேவேளையில் பந்து வீச்சிலும் கடைசி 8 ஓவர்களில் குஜராத் அணி 135 ரன்களை தாரைவார்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர், ஷஷாங் கூட்டணி 28 பந்துகளில் 81 ரன்களை விளாசி மிரட்டியது. கடைசி ஓவரை வீசிய முகமது சிராஜ் 23 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.

போட்டி முடிவடைந்ததும் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது:

தொடக்கத்தில் 3 ஓவர்களில் 17 ரன்களே எடுத்தோம். அதன் பின்னர் நடுப்பகுதியில் தொடர்ச்சியான 3 ஓவர்களில் 18 ரன்களே எடுக்க முடிந்தது. இந்த 6 ஓவர்களிலும் கூட்டாக நாங்கள் 35 ரன்களையே பெற்றோம். இதுவே நாங்கள் ஆட்டத்தை இழக்க காரணமாக அமைந்தது. அதைத் தவிர, இந்த ஆட்டத்தில் எங்களுக்கு பல சாதகமான அம்சங்கள் கிடைத்தன, சிறந்த முறையிலேயே தொடரை தொடங்கி உள்ளோம்.

நாங்கள் பந்துவீசும்போதும், பேட்டிங் செய்யும்போதும் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இன்னிங்ஸின் பிற்பகுதியில் நாங்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தோம். பீல்டிங்கிலும் சில கேட்சுகள் தவறவிட்டோம். இந்த தவறால், 240-250 ரன்களைத் துரத்தும்போது அது எப்போதும் கடினமாகவே இருக்கும். இம்பாக்ட் பிளேயராக வந்து யார்க்கர்களை வீசுவது எளிதல்ல. கிட்டத்தட்ட 15 ஓவர்கள் பெஞ்சில் இருந்த ஒருவருக்கு இது ஒருபோதும் எளிதானது அல்ல. ஆனால் வைஷாக் விஜயகுமார் யார்க்கர்களை வீசிய விதத்தை பாராட்ட வேண்டும்.

இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top