இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளார்.
அணிக்கு தேர்வானது குறித்து சாய் சுதர்சன் கூறும்போது, “இந்திய அணிக்காக விளையாடுவது ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய கவுரவம் என நினைக்கிறேன். இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது சிறப்பான உணர்வையும், மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும்.
எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது வெறும் தொடக்கம் மட்டுமே. இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்திய அணிக்காக நான் விளையாட உள்ளதை நினைத்து எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிப்பாக மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள்” என்றார்.