viabave

6 பந்தில் ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற வைபவ் சூர்யவன்ஷி !

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். தனது அதிரடியால் வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் அவர், எப்படி ராஜஸ்தான் அணிக்கு தேர்வானார் என்ற ரகசியம் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் கூறும்போது,“ ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் இளம் வீரர்கள் மீது முதலீடு செய்து அவர்களை இந்திய அணிக்காக தயார்படுத்தி வருகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடி உள்ளார். பிஹார் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.


எனவே, அவரை வீரர்கள் தேர்வுக்கு அனுப்புமாறு பிஹார் கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். வீரர்கள் தேர்வில் பயிற்சியாளர் ராகுல் திராவிட், உயர் செயல்திறன் இயக்குநர் ஜுபின் பருச்சா, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் உடனிருந்தனர்.

முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்த பிறகு, இந்த சிறுவனிடம் அற்புதமான திறமை உள்ளது என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவரை ஏலத்தில் எடுத்தோம். ஏலத்திற்குப் பிறகு, அவர் நாக்பூரில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸின் உயர் செயல்திறன் மையத்தில் எங்களுடன் மூன்று மாதங்கள் செலவிட்டார், அங்கு அவர் மிகவும் கடினமாக உழைத்தார்.

நாக்பூர் உயர் செயல்திறன் மையத்தில் சூர்யவன்ஷி முதல் ஓவரை விளையாடிய விதத்தில் இருந்து அவரிடம் உள்ள திறமையை அறிந்தோம். அங்கிருந்துதான் ராகுல் திராவிட்டும், ஜுபினும் என்னை அழைத்து, சூர்யவன்ஷியின் மீது ஒரு கண் வைத்திருக்கும்படியும், அவரது பெற்றோருடன் பேசும்படியும் கூறினார்கள். இந்த ஆண்டு அவரை அணிக்கு அழைத்துச் செல்ல முடியாவிட்டாலும் எங்கள் மேற்பார்வையில் வைத்திருக்க விரும்பினோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரை ஏலத்தில் எடுத்தோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top