இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பேட்டிங்கின் மையப்புள்ளியுமாக திகழ்ந்த ‘கிங் கோலி’ என அழைக்கப்படும் விராட் கோலி, தான் நேசித்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். உலகளவில் டி 20 கிரிக்கெட் எழுச்சி கண்டு ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீட்பராக திகழ்ந்த அவர், 5 நாள் ஆட்டத்தின் மீதான தனது தீவிர காதலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
36 வயதான கிங் கோலியை இனிமேல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே காண முடியும். ஏனெனில் கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்ற கையுடன் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்தும் அவர், விடைபெற்றிருந்தார். 2011-ம் ஆண்டு 269-ம் எண் கொண்ட தொப்பியுடன் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமான விராட் கோலி 2014-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் 1 இடத்துக்கு கொண்டு சென்றார்.
முத்தாய்ப்பாக 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியது. அவரது தலைமையின் கீழ், இந்தியா 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றது. இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டன் மற்றும் உலக அரங்கில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்களின் வரிசையில் 4-வது இடத்தையும் பிடித்திருந்தார். கேப்டனாக விராட் கோலி 20 சதங்களையும் விளாசியிருந்தார். இந்த வகையிலும் இந்திய கேப்டன்களில் அதிக சதம் விளாசிய வீரராக வலம் வந்தார்.
டி 20 லீக் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் காண மைதானத்துக்கு வெகுஜன ரசிகர்கள் கூட்டத்தை இழுத்து வந்ததில் விராட் கோலியின் ஆத்மார்த்தமான மட்டை வீச்சு முக்கிய பங்கு வகித்தது. இதை ஒரு முறை மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸும் வெகுவாக பாராட்டியிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை தனது கடைசி சர்வதேச தொடராக கருதக்கூடும்.
2016 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டம் விராட் கோலிக்கு பொற்காலமாக அமைந்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அவரது சராசரி தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் 75-க்கும் அதிகமாக இருந்தது. 14 சதங்களை விளாசியிருந்தார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சரிவை சந்தித்தார். 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

விராட் கோலி கேப்டனாக களத்தில் காட்டிய ஆக்ரோஷம் எல்லோரையும் கவர்ந்தது. அதிலும் அந்நிய மண்ணில் எதிரணிகளை நம்மாலும் புரட்டியெடுக்க முடியும் என்பதை உலகுக்கு காண்பித்தது. எதிரணியின் விக்கெட் விழும் போது அதை பந்து வீச்சாளரை விட அதிகம் கொண்டாடியது கோலியாகத்தான் இருந்தார். மேலும் எதிரணி வீரர்களின் வசைபாடுதலுக்கு பதிலடி கொடுப்பதிலும் விராட் கோலி சளைக்காமல் செயல்பட்டார்.
இந்த ஆக்ரோஷத்தை அவர், ஒட்டுமொத்த அணிக்கும் கடத்தினார். அத்துடன் கிரிக்கெட் வீரருக்கு உடற்தகுதி எந்த அளவுக்கு முக்கியம் என்பதற்கு உதாரணமாகவும் திகழ்ந்தார். இந்த விஷயத்தில் ஒரு கேப்டனாக அவர், கண்டிப்புடன் நடந்திருந்தார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் விராட் கோலியை அந்த அணி வீரர்கள் சீண்டிய போதெல்லாம் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்தினார். இது 2 சுற்றுப்பயணங்களில் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் அவரை சீண்டாதீர்கள் என முன்னாள் வீரர்கள் அரைகூவல் விடுக்கத் தொடங்கினர்.
மெகாஸ்டராக திகழ்ந்த விராட் கோலியின் கடைசி டெஸ்ட் தொடர் சோகமாக அமைந்தது. எப்போதும் பேராதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இம்முறை அவர், ஒரு சதத்தை மட்டுமே அடித்தார். 10 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டுவதற்கு அவருக்கு 770 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அதை பூர்த்தி செய்யாமல் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.