ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 283 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டத்தில் 83.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. மார்க்ரம் 207 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் விளாசினார். தெம்பா பவுமா 134 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார்.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வானார். ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி 27 வருடங்களுக்கு பிறகு தற்போது தெம்பா பவுமா தலைமையில் பட்டம் வென்றுள்ளது.
வெற்றிக்கு பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் தெம்பா பவுமா கூறும்போது, “ஒரு அணியாக நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். பல்வேறு தொடர்களில் முக்கியமான கட்டங்களில் வீழ்ந்து ஏமாற்றத்தின் வேதனையை அடைந்தோம். தற்போது இந்த வெற்றி பல வெற்றிகளை கொண்டு வரும் என்று நம்புகிறேன். ரபாடா ஒரு மகத்தான வீரர், சில வருடங்களில் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இருப்பார் என்று நினைக்கிறேன்.
சர்ச்சைக்கு மத்தியில் அவர், விளையாடி சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார். மார்க்ரம் நம்பமுடியாத வகையிலான சிறந்த வீரர். புள்ளிவிவரங்கள் முக்கியம், ஆனால் நாங்கள் பார்ப்பது குணம்தான், மார்க்ரமிடம் அது இருக்கிறது. அவர், எங்களுக்கு கிடைத்த இன்னொரு மகத்தான வீரர். நாங்கள் பலவீனமான அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்ததாக சிலர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இந்த வெற்றி அவர்களுக்கான பதிலாகும்” என்றார்.