கோலாலம்பூர்
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் ஆட்டத்தில் 9-21, 21-12, 21-6 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹுவாங் யுவை தோற்கடித்தார். தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் மற்றொரு சீன தைபே வீரரான குவோ குவான் லின்னை 21-8, 21-13 என்ற நேர் செட்டில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற 32 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரதான சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லு குவாங் ஸூவுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீரர்களான தருண் மனேபள்ளி, சங்கர் முத்துசாமி ஆகியோர் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தனர். மகளிர் ஒற்றையர் தகுதி சுற்றில் இந்தியாவின் அமோல் ஹார்ப் தோல்வியை சந்தித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மோஹித் ஜக்லான், லக்சிதா ஜக்லான் ஜோடி 15-21, 16-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் மிங் யப் டூ, லீ யு ஷான் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. பிரதான சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திரங்களான பி.வி.சிந்து, ஹெச்எஸ் பிரனாய் களமிறங்குகின்றனர்