WhatsApp Image 2025 05 23 at 19.02.37

அதிக ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டோம் ஷுப்மன் கில் புலம்பல்

அகமதாபாத்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குஜராத் டைட்டன்ஸ். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 64 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் விளாசினார். நிகோலஸ் பூரன் 27 பந்துளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார்.

236 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஷாருக் கான் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசினார். சாய் சுதர்சன் 21, ஷுப்மன் கில் 35, ஜாஸ் பட்லர் 33, ஷேர்பேன் ரூதர்போர்டு 33 ரன்கள் சேர்த்தனர்.

பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே முன்னேறிவிட்ட குஜராத் அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ளது. தற்போதைய தோல்வியால் குஜராத் அணி லீக் சுற்றை முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

குஜராத் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் அந்த அணி 20 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். அதேவேளையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அதிகபட்சமாக 21 புள்ளிகளை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

WhatsApp Image 2025 05 23 at 19.02.36

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “பந்துவீச்சில் நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை வழங்கிவிட்டோம். லக்னோ அணியை 210 முதல் 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். இதுதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. பிளே ஆஃப் சுற்றை கருத்தில் கொண்டு அணியை சோதித்து பார்ப்பதற்காக பீல்டிங்கை முதலில் தேர்வு செய்யவில்லை.

பவர்பிளேவில் நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். ஆனால் விக்கெட்களை வீழ்த்தவில்லை. அதன் பின்னர் அடுத்த 14 ஓவர்களில் லக்னோ 180 ரன்கள் குவித்தது. இது மிகவும் அதிகம். இலக்கை துரத்தியபோது 17 ஓவர்கள் வரை ஆட்டம் எங்கள் வசம் இருந்தது. ஷாருக்கான், ஷேர்பேன் ரூதர்போர்டு சிறப்பாக விளையாடினார்கள். அடுத்த ஆட்டத்தில் உத்வேகத்தை திரும்ப பெறுவது முக்கியம்” என்றார். குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (25-ம் தேதி) சிஎஸ்கே அணியுடன் இதே மைதானத்தில் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top