ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா – பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா 172 ரன்களும், பஞ்சாப் அணி 139 ரன்களும் எடுத்தன. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய சவுராஷ்டிரா அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 58.5 ஓவர்களில் 286 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக பிரேரக் மன்கட் 56, ரவீந்திர ஜடேஜா 46, ஹெட்விக் கோட்டக் 39, பார்த் புட் 37 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 5, ஜசிந்தர் சிங் 3, ப்ரீத் தத்தா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 320 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணி 39 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக உதய் சஹரன் 31, ஹர்னூர் சிங் 18, பிரப்சிம்ரன் சிங் 17 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 32 பந்துளை சந்தித்து 14 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியிருந்தார். சவுராஷ்டிரா அணி தரப்பில் தர்மேந்திரசிங் ஜடேஜா, பார்த் புட் ஆகியோர் தலா 5 விக்கெட்களை வீழ்த்தினர். 194 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சவுராஷ்டிரா அணி முழுமையாக 6 புள்ளிகளை பெற்றது. எலைட் ‘பி’ பிரிவில் உள்ள அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 19 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

