‘பாகுபலி’ அம்பதி ராயுடு 74 ரன் விளாசி அசத்தல்
ராய்ப்பூர்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடரில் பிரையன் லாரா தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி.

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள எஸ்விஎன்எஸ் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு (மார்ச் 16) நடைபெற்ற இந்த ஆட்டத்தை காண 50 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 7 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா மாஸ்டர்ஸ் அணி.

அதிகபட்சமாக லெண்ட் சைமன்ஸ் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், டுவைன் ஸ்மித் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் சேர்த்தனர். ஜாம்பவான் பிரையன் லாரா 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பந்துவீச்சில் இந்தியா அணி தரப்பில் வினயர் குமார் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், ஷாபாஷ் நதீம் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

149 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா மாஸ்டர்ஸ் அணி அம்பதி ராயுடு, சச்சின் டெண்டுல்கர் ஜோடியின் அற்புதமான ஆட்டத்தால் 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 50 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் சச்சின் டெண்டுல்கர் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும் விளாசினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 67 ரன்களை விளாசியிருந்தது. குர்கீரத் சிங் மான் 14, யூசுப் பதான் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் 13, ஸ்டூவர்ட் பின்னி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மாஸ்டாஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.