ஜெய்ப்பூர்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.
218 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில், ரன்கள் ஏதும் சேர்க்காமல் தீபக் ஷாகர் பந்தில் ஆட்டமிழந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13, நிதிஷ் ராணா 9, கேப்டன் ரியான் பராக் 16, துருவ் ஜூரெல் 11, ஷிம்ரன் ஹெட்மயர் 0, ஷூபம் துபே 15, சோப்ரா ஆர்ச்சர் 30, தீக்சனா 2, குமார் கார்த்திக்கேயா 2 ரன்களில் நடையை கட்டினர்.
மும்பை அணி சார்பில் டிரெண்ட் போல்ட், கரண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ராஜஸ்தான் அணிக்கு இது 8-வது தோல்வியாக அமைந்தது.
இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறும்போது, “மும்பை அணி பேட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியது. அவர்கள், கைவசம் விக்கெட்களை அதிகம் வைத்திருந்தனர்.
இந்த ஆடுகளத்தில் 190 முதல் 200 ரன்கள் இலக்கு என்றால் சிறப்பானதாக இருந்திருக்கும். பேட்டிங்கில் எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. ஆனால் நான், துருவ் ஜூரெல் உள்ளிட்ட மிடில் ஆர்டர்தான் முன்னேற வேண்டும்.
நாங்கள் பல விஷயங்களை சரியாகவும், தவறாகவும் செய்துள்ளோம். சிறுசிறு தவறுகளை அதிகம் செய்துள்ளோம். அவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என்றார்.