லக்னோ
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 17 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட பெங்களூரு லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
நடப்பு சசீசனில் 11 ஆட்டங்களில் 7 அரை சதங்கள் அடித்துள்ள விராட் கோலியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். ரஜத் பட்டிதார், ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், டிம் டேவிட், ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோரும் அதிரடியில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் இல்லாதது பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும். சுழலில் கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா பலம் சேர்க்கக்கூடும்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 9 புள்ளிகளை பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியிருந்தது.
அந்த ஆட்டத்தில் 20 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மாவிடம் இருந்து மேலும் ஒரு அதிரடி ஆட்டம் வெளிப்படக்கூடும். இஷான் கிஷன், ஹன்ரிச் கிளாசன், கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கவுரமான வகையில் தொடரை நிறைவு செய்வதில் ஹைதராபாத் அணி கவனம் செலுத்தக்கூடும்.