2வது இடம் பிடித்தது * ரிஷப் அதிரடி சதம் வீண்
லக்னோ: ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி ஜிதேஷ் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. மிட்செல் மார்ஷ் 67 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), மேத்யூ பிரீட்ஸ்க் 14, நிகோலஸ் பூரன் 13 ரன் எடுத்து அவுட்டாகினர்.
அமர்க்களமாக விளையாடிய எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன் (61 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), அப்துல் சமத் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் துஷாரா, புவனேஷ்வர், ஷெப்பர்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
சால்ட் 30 ரன் (19 பந்து, 6 பவுண்டரி), விராத் கோஹ்லி 54 ரன் (30 பந்து, 10 பவுண்டரி), ரஜத் பத்திதார் 14, லிவிங்ஸ்டன் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். மயாங்க் அகர்வால் 41 ரன் (23 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 85 ரன்னுடன் (33 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மயாங்க் – ஜிதேஷ் ஜோடி 44 பந்தில் 107 ரன் தெறிக்கவிட்டது குறிப்பிடத்தக்கது. லக்னோ பந்துவீச்சை பதம் பார்த்த ஜிதேஷ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் அடித்த அதிரடி சதம் வீணானது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து குவாலிபயர் 1 ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது. முல்லன்பூரில் மே 29ம் தேதி இரவு நடைபெறும் குவாலிபயர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு காத்திருக்கிறது. அந்த அணி 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த குஜராத் – மும்பை அணிகள் மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் (மே 30, முல்லன்பூர்) வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 2 ஆட்டத்தில் (ஜூன் 1, அகமதாபாத்) மோதும்.
- ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் வெளியூரில் விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனை ஆர்சிபி வசமாகி உள்ளது (கொல்கத்தா, சென்னை, மும்பை, ஜெய்பூர், புது சண்டிகர், டெல்லி, லக்னோ).